
வாஷிங்டன், ஜூலை-12 – நமது பூமிப் பந்தின் ஆயுட்காலம் எப்போது முடிவுக்கு வரும்? இது நம்மிடையே விடையில்லாமல் தொடரும் கேள்வி…
இந்நிலையில், இன்னும் பல பில்லியன் ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிப் பிழைக்குமா என்பது குறித்து, ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்திய விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு வியத்தகு தகவல்களை வெளியிட்டுள்ளது.
இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தனது ஹைட்ரஜன் எரிபொருளை முழுமையாக இழந்து, ஒரு ‘Red Giant’ எனப்படும் இராட்சத சிவப்பு நட்சத்திரமாக உருவெடுக்கும் என்றும், அப்போது அது புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களை முழுமையாக விழுங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரமாக மாறிய சூரிய குடும்ப அமைப்பில், வியாழன் கிரகத்தைப் போன்ற ஓர் இராட்சத Exoplanet அழியாமல் தப்பிப்பிழைத்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒரு நட்சத்திரத்தின் ‘மரணம்’ என்பது அதன் கிரகங்களின் இறுதி முடிவு அல்ல என்பதை இந்த அதிர்ச்சித் தகவல் நிரூபிக்கிறது.
பூமி தனது சுற்றுப்பாதையை பாதுகாப்பாக மாற்றிக்கொண்டால், அது சூரியனின் இராட்சத வெப்பத்தில் இருந்து தப்பிப்பிழைக்க வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சூரிய வெப்பத்தின் அதிகரிப்பால் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இன்னும் 1.8 பில்லியன் ஆண்டுகளில் முடிவுக்கு வரக்கூடும் என்றாலும், ஒட்டுமொத்த பூமியின் இயற்பியல் அமைப்பு அழியாமல் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது பிரகாசமாகியுள்ளது இந்த ஆய்வில் தெரிய வருகிறது.



