
காஜாங், ஜூலை-20-உலகின் மிகப் பெரிய எரிபொருள் உற்பத்தியாளர்களில் ஒன்றான சவுதி அரேபியாவுடன் ஒப்பிடும் போது மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
எரிபொருள் விலையை அரசு ஏன் இன்னும் குறைக்கவில்லை, ஒரு லிட்டருக்கு 50 சென் வரை விலை குறைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை என சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.
அது குறித்து பேசிய பிரதமர், இத்தகைய பரிந்துரைகள் முதன் முதலில் முன் வைக்கப்பட்ட போது சவுதி அரேபியாவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 50 சென் ஆக இருந்தது. ஆனால், தற்போது விலை ஒரு லிட்டருக்கு சுமார் RM2.40 முதல் RM2.50 வரை உயர்ந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
சவுதி அரேபியாவைப் போலன்றி, மலேசியா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 50 விழுக்காடு இறக்குமதி செய்கிறது. என்றாலும் , ‘BUDI MADANI’ திட்டத்தின் மூலம் RON95 பெட்ரோலின் விலையை ஒரு லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் என்ற அளவில் பராமரிக்க முடிகிறது என அன்வார் கூறினார்.
மக்கள் தொடர்ந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்ய, ஒவ்வோர் ஆண்டும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அரசாங்கம் 40 பில்லியன் ரிங்கிட் மானியம் வழங்குகிறது. எரிபொருள் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரலாம். ஆனால் அதற்கான செலவை ஏற்பது யார் என பிரதமர் வினவினார்.



