
சிறு வயதிலேயே கலைத்திறமையால் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறார் 11 வயது இளம் கலைஞர் தன்வி கரிமெல்லா…
அண்மையில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்து மலேசியாவிற்குப் பெருமையும் சேர்த்துள்ளார் இவர்.
தமிழகத்தின் சென்னையில் பிறந்து, மலேசியாவில் வளர்ந்த தன்வி கரிமெல்லா, தனது மூன்று வயது முதலே ‘ஸ்ரீ நந்திகேஸ்வரர் நடனம் மற்றும் இசை நுண்கலைக் கலாலய’ நடனப் பள்ளியில் குரு ஸ்ரீ டாக்டர் சந்திரமோகன் இராமசாமியின் வழிகாட்டுதலில் தீவிரப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க கலைப் பயணத்தின் உச்சமாக, கோலாலம்பூரில் உள்ள சாந்தானந்த் கலை அரங்கில் இவரது அரங்கேற்றம் மிக விமரிசையாக நடைபெற்று முடிந்தது.
இந்த விழாவில், ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாசார மையத்தின்’ இயக்குநர் விஜயலட்சுமி சுந்தரராஜன் தலைமை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
அவருடன் ‘MySkills அறவாரியத்தின்’ இணை நிறுவனர் பசுபதி சித்தம்பரம், டத்தோ தங்கஸ்வரி சுப்பையா மற்றும் மலேசியாவின் முன்னணி நடனக் குருமார்களும் கலைஞர்களும் பங்கேற்று இளம் கலைஞரை வாழ்த்தினர்.
தானா ராத்தா அனைத்துலகப் பள்ளியில் 7-ஆம் ஆண்டு பயிலும் இராகேஷ் கரிமெல்லா மற்றும் கல்யாணி கரிமெல்லா தம்பதியரின் அன்பு மகளான தன்வி, படிப்பிலும் ஓவியம், கர்நாடக இசை ஆகியவற்றிலும் சிறந்து விளங்குவதோடு, புகழ்பெற்ற சிதம்பரம் நாட்டியாஞ்சலி, புதுடெல்லி ஆந்திர பவன் மற்றும் ஆஸ்ட்ரோ நேரலை நிகழ்ச்சிகளிலும் நடனமாடி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



