
கோலாலம்பூர், ஜூலை-25-வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளையே நம்பியிருக்கும் நிலையைக் குறைக்கவும், நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவும், மலேசியாவில் முதன்முறையாக மனிதர்களுக்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திட்டமிடப்பட்டதை விட இரண்டு ஆண்டுகள் முன்னதாக, அதாவது 2028-ஆம் ஆண்டிலேயே உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் மனிதத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற தீவிர நோய்களைத் தடுக்கும் PCV13 தடுப்பூசி உள்நாட்டில் தயாரிக்கப்படவுள்ளது.
நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான Pharmaniaga Bhd, சீனாவைச் சேர்ந்த நிறுவனத்தின் தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் மூலம் இத்தடுப்பூசியைத் தயாரிக்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் வெளிநாட்டுத் தடுப்பூசிகளையே முழுமையாக நம்பியிருந்த நிலையைச் சுட்டிக்காட்டிய அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் Chang Lih Kang, எதிர்கால சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள இத்தகைய உள்நாட்டுத் தயாரிப்புகள் மிகவும் அவசியமானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மலேசியா தனது தேவைகாக அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான், தென் கொரியா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து அனைத்துத் தடுப்பூசிகளையும் இறக்குமதி செய்து வருகிறது.



