
கோலாலம்பூர், செப்-8—Kelana Jaya LRT வழித்தடத்தில் உள்ள Pasar Seni மற்றும் Kajang நிலையங்களில் இன்று காலை ஏற்பட்ட பயணிகள் நெரிசலுக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமல்ல. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே அந்நெரிசலுக்குக் காரணம் என Rapid KL விளக்கம் அளித்துள்ளது.
இன்று காலை LRT சேவை அட்டவணையில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை. இருப்பினும், அவ்விரு நிலையங்களிலும் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக அது தெளிவுபடுத்தியது.
பயணிகளின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட நிலையங்களில் பயணிகள் நுழைவு மற்றும் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக Rapid KL மேலும் தெரிவித்தது.
Pasar Seni மற்றும் Kajang LRT நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டது தொடர்பான காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. முந்தைய நாள் ஏற்பட்ட LRT சேவைப் பாதிப்பு இன்னும் முழுமையாகச் சரிசெய்யப்படவில்லை என அக்காணொளியில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



