
கெடா, ஜூலை 28 – கெடா பாலிங், கம்போங் பாவா கூனுங் பகுதியிலுள்ள வாடகை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, தனியாக வசித்து வந்த ஆடவர் ஒருவர் வீட்டுக்குள் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இரண்டு நாட்களாக அவர் வேலைக்குச் செல்லாததால் சந்தேகமடைந்த நண்பர் வீட்டுக்குச் சென்றபோது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியை நாடினார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கதவைத் திறந்தபோது, ஆடவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். பின்னர் அவரது சடலம் மேல் விசாரணை மற்றும் உடற்கூறு பரிசோதனைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.



