
கின்ஸாசா, ஆகஸ்ட்-15,மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் இபோலா வைரஸ் கிருமி பாதிப்பால், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழந்து வருவதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.
இதுவரையிலான பதிவுகளில் இதுவே மிக வேகமாகப் பரவி வரும் இபோலா தொற்று என ஐநாவின் மனிதநேய விவகாரங்களுக்கான தலைவர் Tom Fletcher தெரிவித்துள்ளார்.
நிலைமை மேலும் கைமீறிப் போவதற்கு முன் உலக நாடுகள் அவசர உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே மாதம் முதல் பரவி வரும் இந்தத் தொற்றினால், உறுதிப்படுத்தப்பட்ட 4,500-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் 2,100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கோங்கோவின் 6 மாநிலங்கள் மட்டுமின்றி, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் எல்லைப் பகுதிகளிலும் இதன் பாதிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் ஆப்பிரிக்கா முழுவதும் இபோலா தொற்றுக்கு 15,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதற்கு முன்னர், 2018 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் ஏற்பட்ட மிக மோசமான பரவலில், 3,500 பாதிப்புகளில் கிட்டத்தட்ட 2,300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது



