
புத்ராஜெயா, ஆகஸ்ட்-18–மலேசியர்களிடையே தேசப்பற்று உணர்வைத் தூண்டவும், தேசிய அடையாள உணர்வை வலுப்படுத்தவும் தேசிய ஒற்றுமை அமைச்சு பல்வேறு தேசிய உணர்வு, ஒற்றுமை, வரலாறு மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறது. இவ்வாண்டு தேசிய தினமும் மலேசிய தினமும் “மலேசியா மடானி: நல்வாழ்வு அனைவராலும் அனுபவிக்கப்படுகிறது”என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
அக்கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்ட 2026 தேசிய ஒருங்கிணைப்பு ஒற்றுமை இயக்கம், மலேசியா மெர்டேக்கா குழந்தைகள் கொண்டாட்டம், மெர்டேக்கா கண்காட்சி, போலா மெர்டேக்கா கண்காட்சி, துன் அப்துல் ரசாக்கை நினைவுகூரும் நிகழ்ச்சி, அருங்காட்சியகத்தில் இரவு தங்கும் நிகழ்ச்சி, ருக்குன் நெகாரா பேச்சுப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனம், மதம், கலாச்சாரம் மற்றும் பிராந்திய ரீதியிலான பன்முகத்தன்மையைச் சிதைக்காமல், தேசிய அடையாளம், ஒன்றிணைந்த உணர்வு மற்றும் நாட்டின் மீதான பற்று ஆகியவற்றை வலுப்படுத்துவதன் வழி தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒற்றுமை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார். மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதிலும், தேசப்பற்றை விதைப்பதிலும், செழிப்புமிக்க மலேசியாவைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை உறுதி செய்வதிலும் அமைச்சு கடப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



