
கோலாலம்பூர், ஆகஸ்ட்-22-கங்கார், புக்கிட் லாகியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக, பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்சா நேரடியாக விளக்கமளிக்க வேண்டும் என செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாசலம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக பெர்லிஸ் முஃப்தி டத்தோ Dr முகமட் அஸ்ரி சைனுல் அபிடின் பதிலளித்துள்ள நிலையில், மாநில அரசின் நடவடிக்கை குறித்து மந்திரி பெசார் இதுவரை ஏன் வெளிப்படையாக விளக்கமளிக்கவில்லை என லிங்கேஷ்வரன் கேள்வி எழுப்பினார்.
சமய நல்லிணக்கம் குறித்து கருத்து தெரிவிக்க முஃப்திக்கு உரிமை உள்ளது.
ஆனால் நிலத்தின் நிலை, அமுலாக்க நடவடிக்கை அல்லது மாநில நிர்வாக முடிவுகள் தொடர்பான விவகாரங்களுக்கு மாநில நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர்களே விளக்கமளிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN முன்னதாக கவலைத் தெரிவித்ததும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.
கேள்வி எழுப்ப ராயருக்கும் உரிமை இருப்பதாக லிங்கேஷ்வரன் தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் ராயர் மாநில அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறலைக் கோருவதை இன உணர்வுகளைத் தூண்டுவதாகக் கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான எந்தவோர் அமுலாக்க நடவடிக்கையும் வெளிப்படையாகவும், நியாயமாகவும், முறையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை இன அல்லது மத மோதலாக மாற்ற வேண்டாம் என்றும் லிங்கேஷ்வரன் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.



