
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றவிருக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தின சிறப்பு உரை நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) பிற்பகல் 2.00 மணிக்கு புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையமான PICC-யில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புகைமூட்டச் சூழல், வருகையாளர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வசதி ஆகியவற்றை உறுதிச் செய்யும் நோக்கில் இந்த நேரம் மற்றும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
மடானி அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், நாட்டுப்பற்றை வலுப்படுத்தவும் இந்நிகழ்வு முக்கிய தளமாக அமையும் என அமைச்சு கூறியது.
பொது மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொண்டு தேசிய தின உணர்வைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்வார் கலந்துகொள்ளும் இந்நிகழ்வு முன்னதாக கோலாலம்பூர் மெரேடேக்கா சதுக்கத்தில் நாளை இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



