
கோத்தா பாரு, செப்-14-கிளந்தான், Telipotட்டில் உள்ள பிரபல தாய்லாந்து உணவகத்தில் சிறுமியை நபர் ஒருவர் உதைக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Threads சமூக ஊடகத்தில் பரவிய அக்காணொளி தொடர்பில் நேற்றிரவு சுமார் 10.24 மணியளவில் பொதுமக்களில் ஒருவரிடம் இருந்து புகார் கிடைத்ததாக கோத்தா பாரு காவல் துறைத் தலைவர் ACP Mohd Azmir Damiri தெரிவித்தார். புகார் கொடுத்த ஆடவரின் மகளைச் சந்தேக நபர் உதைக்கும் வன்முறைக் காட்சிகள் அக்காணொளியில் பதிவாகியிருந்ததாக அவர் கூறினார்.
உணவக உரிமையாளர் தனது ஃபேஸ்புக் கணக்கில் அக்காணொளியை பதிவேற்றியதாகவும், அச்சம்பவம் 2001 குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் Mohd Azmir குறிப்பிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் காணொளியில் உள்ள சிறுமியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 011-11136722 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ முன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



