
இஸ்தான்புல், மே-21 – AI அதிநவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் உலகளவில் 25 விழுக்காடு வேலைகள் பாதிக்கப்படலாம்.
அதுவே, டிஜிட்டல் பயன்பாடு அதிகமுள்ள பணக்கார நாடுகளில் அது 34 விழுக்காட்டைத் தொடலாம்.
குமாஸ்தா மற்றும் டிஜிட்டல் தொடர்பான வேலைகளே அதிகம் பாதிக்கப்படுமென, ILO எனப்படும் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு மற்றும் போலந்து தேசிய ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
குமாஸ்தாக்கள் பார்க்கும் பல்வேறு நிர்வாகப் பணிகளையும் தரவுகளின் புகுத்தலையும் AI-யால் எளிதில் செய்து விட முடியும் என்பதால், அவ்வேலை அதிகம் பாதிக்கப்படுகிறது.
அதற்கடுத்து, ஊடகத் துறை, மென்பொருள் உருவாக்கம், நிதியியல் போன்ற அறிவாற்றல் வேலைகளும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன.
ஆள்பலச் சந்தையை AI மீண்டும் வடிவமைக்கும் சாத்தியம் குறித்து இதுவரை வெளியானதிலேயே இது தான் உலகலாய துல்லிய அறிக்கையாகும்.
AI கொண்டு வரும் தாக்கத்தால் உலகளவில் 40 விழுக்காடு வேலைகள் பாதிப்படையலாம் என, IMF எனப்படும் அனைத்துலக நிதியம் கடந்தாண்டு கூறியிருந்ததுடன் இவ்வறிக்கை ஏறக்குறைய ஒத்துப் போகிறது.
என்றாலும், இந்த ஆய்வானது வேலை உருமாற்றத்தை தான் அதிகம் வலியுறுத்துகிறதே தவிர, வேலையிடங்களில் பேரளவில் ஆட்களுக்கு பதிலாக AI-யை ‘அமர வைப்பதில்’ அல்ல.
உலக நாடுகள் எச்சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளவும் விரைந்து செயல்படவும் ஏதுவாக இவ்வறிக்கை உதவுமென ILO மூத்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.