
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29,தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று பிறந்த மலேசியர்களைக் கொண்டாடும் வகையில், ‘Sambutan Anak Merdeka Malaysia’ எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய தேசிய ஆவணக் காப்பகத்துடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.
சுதந்திர தினப் பகிர்வை நினைவுகூர்வதுடன், நாட்டுப்பற்றை வளர்க்கவும், அமைதியான தேசத்தைக் கட்டமைத்த முந்தைய தலைமுறையினரின் தியாகங்களைப் போற்றவும் இந்நிகழ்ச்சி வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மக்களிடையே ஒற்றுமையையும் தேசிய அடையாளத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்நிகழ்வு, வரும் ஆகஸ்ட் 31 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள துன் உசேன் ஓன் நினைவகத்தில் (Memorial Tun Hussein Onn) நடைபெறவுள்ளது.
எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிறந்தவர்கள் இக்கொண்டாட்டத்தில் திரளாகப் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.



