
‘கோலாலம்பூர் –Instagram, TikTok, Facebook என எந்த சமூக ஊடகத்தைத் திறந்தாலும், இப்போது நம்மை வரவேற்பது மனிதர்கள் மட்டுமல்ல… AI மனிதர்கள், AI குழந்தைகள், பேசும் உணவுகள் என பட்டியல் நீள்கிறது.
“என் பெயர் அருண்…” என பெயருக்கேற்ப வார்த்தைகளை இணைத்து பேசும் AI கதாபாத்திரங்கள் முதல், குட்டிக் குட்டியாக நடந்து பேசும் உணவுகள் வரை, அண்மைக்காலமாக AI வீடியோக்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
ஆரம்பத்தில் புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இந்த வீடியோக்கள், தற்போது ஒரே பாணியில் அளவுக்கு அதிகமாக உருவாக்கப்படுவதால் சிலருக்கு சலிப்பையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக உணவுகளை மனிதர்களைப் போன்று சித்தரிக்கும் AI வீடியோக்கள் அடுத்த கட்டத்திற்கே சென்றுவிட்டன. ஒரு சிறிய bun-க்கு கண், வாய் வைத்து பேச வைப்பது ஒருபுறம் என்றால், அதே உணவு தனது சிறிய வடிவங்களைப் பெற்றெடுப்பது அல்லது வெளியேற்றுவது போன்ற வினோதமான காட்சிகளும் இணையத்தில் வலம் வருகின்றன.
பார்ப்பதற்கு ‘cute’ எனத் தோன்றினாலும், சில காட்சிகள் “இதைப் பார்த்த பிறகு அந்த உணவையே சாப்பிடத் தோன்றவில்லை!” என்று சொல்ல வைக்கும் அளவுக்கும் சென்றுவிடுகின்றன.
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்குவது முன்பைவிட எளிதாகியுள்ள நிலையில், ஒவ்வொரு trend-ஐயும் பின்பற்றி ஒரே மாதிரியான ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உருவாவது பார்வையாளர்களிடையே AI fatigue எனப்படும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது.
ஒருகாலத்தில், “அட! AI-யில் இப்படியெல்லாம் செய்ய முடியுமா?” என்று ஆச்சரியப்பட்ட நாம், இன்று சில வீடியோக்களைப் பார்த்ததும் அடுத்த நொடியே scroll செய்துவிடுகிறோம்.
தொழில்நுட்பம் வளர வளர AI-யின் கற்பனைக்கு எல்லை இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அதை ரசிக்கும் மனிதர்களின் பொறுமைக்கு மட்டும் எல்லை இருக்கிறது போல!



