
பத்து காவான், ஏப்ரல்-26-நாட்டின் முதல் நிலை பாடகி டத்தோ ஸ்ரீ சித்தி நூர்ஹலிசா, சாலைப் போக்குவரத்துத் துறையின் புதிய சாலைப் பாதுகாப்பு தூதராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பினாங்கு, பத்து காவானில் நடைபெற்ற JPJ-வின் 80-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மெகா மடானி விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இந்த விழாவைத் தொடக்கி வைத்தார்.
மலேசிய மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டுள்ள சித்தி நூர்ஹலிசா மூலம், சாலைப் பாதுகாப்பு விதிகளையும் விழிப்புணர்வையும் அனைத்து தரப்பு மக்களிடமும், குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நியமனத்தின் நோக்கம் என, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த கௌரவத்தை ஏற்றுக்கொண்ட சித்தி நூர்ஹலிசா, பாதுகாப்பான ஓட்டுநர் கலாச்சாரத்தை உருவாக்குவதிலும், விபத்துக்களைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படப் போவதாகத் தெரிவித்தார்.
இவ்விழாவில், மேம்படுத்தப்பட்ட MyJPJ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
சித்தியின் இப்புதிய பயணம் நாட்டின் சாலை பாதுகாப்புத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.



