Latestமலேசியா

MACC சீர்திருத்தத்தை வலியுறுத்தி கோலாலம்பூரில் 500 பேர் பங்கேற்ற இரண்டாவது ‘அசாம் எதிர்ப்பு’ பேரணி

கோலாலம்பூர், ஏப்ரல்-25,

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக, இன்று கோலாலம்பூரில் சுமார் 500 பேர் கலந்து கொண்ட இரண்டாவது எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.

கருப்பு நிற ஆடை அணிந்த போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் SOGO பேரங்காடி வளாகத்தின் முன் கூடினர்.

அங்கிருந்து அவர்கள் டத்தாரான் மெர்டேகா நோக்கி முழக்கமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர்.

அசாம் பாக்கியின் தனியார் நிறுவனப் பங்குகள் தொடர்பான சர்ச்சை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கையகப்படுத்தலில் அவர் தலையிட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அசாம் பாக்கியின் பதவிக்காலம் வரும் மே 12-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற நீதிபதி டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலாம் அமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், பதவி மாற்றம் மட்டுமே போதாது என்றும், முறையான விசாரணை நடத்தப்பட்டு MACC அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் MUDA கட்சித் தலைவர் அமிரா ஆயிஷா மற்றும் BERSIH தலைவர் ஃபைசால் அப்துல் அசிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தப் பேரணி எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் கலைந்துச் சென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!