
ஜோகூர் பாரு, மே-14- ஜோகூர் பாருவில் உள்ள உடற்பயிற்சி மையமொன்றில் ‘skinhead’ இசைக் குழுவின் பாடகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக 6 பேர் கைதாகியுள்ளனர்.
திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் ஜோகூர் பாரு மற்றும் செகாமாட் மாவட்டங்களில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டதை, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.
இரும்புக் குப்பைத் தொட்டியால் தாம் தாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞர் சிலாங்கூர் அம்பாங்கில் 2 நாட்களுக்கு முன்னர் போலீஸ் புகார் செய்தார்.
‘live band’ இசைக் கச்சேரி நடந்துகொண்டிருக்கும் போது அத்தாக்குதல் நடத்தப்பட்டது; அதில், தலை மற்றும் முகத்தில் காயமடைந்து, உடல் முழுக்க வலி ஏற்பட்ட அவ்விளைஞர் அம்பாங்
மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றார்.
கடந்தாண்டு அம்பாங்கில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் போது, பாதிக்கப்பட்டவருக்கும், முதன்மை சந்தேக நபரான 36 வயது ஆடவருக்கும் இடையில் மூண்ட கருத்து வேறுபாட்டின் தொடர்ச்சியே, இச்சண்டைக்குக் காரணமென தெரிய வந்துள்ளது.
அந்த முதன்மை சந்தேக நபர் சம்பவத்தின் போது போதைப் பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்ட வேளை, 2 பழையக் குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அப்பாடகர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிக்கும் படங்கள் முன்னதாக அந்த இசைக் குழுவின் facebook பக்கத்தில் பதிவேற்றம் கண்டு வைரலானது.