
SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது பெண் கைது; போலீஸைத் தற்காக்கும் உள்துறை அமைச்சர்
கோலாலம்பூர், பிப்ரவரி-10,
SOSMA சட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி அண்மையில் கைதுச் செய்யப்பட்டதை, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தற்காத்துள்ளார்.
அந்தச் சிறுமி தனது தந்தையுடன் வாகனத்தில் இருந்தபோது அவரோடு சேர்த்து கைதானது முன்னதாக பெரும் சர்ச்சையானது.
மகளை விடுவிக்க வேண்டி தாயார் போலீஸில் புகார் செய்ததையடுத்து இந்தச் சம்பவம் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
மனித உரிமை அமைப்புகளும் போலீஸைக் கண்டித்தன.
ஆனால், தந்தை “ஆள்கடத்தல் நடவடிக்கையில் தொடர்பு உள்ளவர்” என சந்தேகிக்கப்படுகிறார்… எனவே தான் மகள் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்டு கைதானார்.
9 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதில், மியான்மார் கள்ளக்குடியேறிகளை தாய்லாந்து வழியாக மலேசியாவுக்கு கடத்தும் குற்றச்செயலை விசாரிக்க அவர் துப்புக் கொடுத்து உதவியதாகவும் சைஃபுடின் தெரிவித்தார்.
பின்னர் அப்பெண் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தத்கது.
இதனிடையே, SOSMA சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நாடாளுமன்றத்தில் அவை தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.



