![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-01-Jul-2024-08-10-PM-9305.jpg)
கோலாலம்பூர், ஜூலை 1 – எஸ்.பி.எம் தேர்வில் 10 ஏக்கள் அல்லது அதற்கு மேல் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மெட்ரிகுலேஷன் அல்லது பொதுப் பல்கலைக்கழகத்தில் பயில அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் எந்தச் சிக்கலையும் எதிர்நோக்கவில்லை என உயர்க் கல்வியமைச்சர் ஜம்ரி அப்துல் காடீர் தெரிவித்திருக்கிறார்.
பல்கலைக்கழகங்களிலும் மெட்ரிகுலேஷனிலும் போதுமான இடங்கள் உள்ளதால் 10 ஏக்களுக்கும், அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் இடமளிப்பதில் சிக்கல் இருக்காது என்று கூறியவர், இது குறித்து கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக்குடனும் விவாதிக்கப்படும் என்றும் கான்கார்ட் கிளப் (Concorde Club) அமர்வுக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஜிம் எஸ்.பி.எம் தேர்வில் 10ஏக்களும், அதற்கும் மேல் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் இடம் உறுதி செய்யப்படும் என்று அறிவித்ததை சுட்டிக்காட்டி அவர், பூமிபுத்திரர்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்படுவது போன்ற பிரச்சனைகளை எழுப்பக்கூடாது என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, இன்று கல்வி அமைச்சகத்தின் மெட்ரிகுலேஷன் திட்டத்தின் கீழ் பூமிபுத்ரா கோட்டா முறை மாறாமல் இருக்கும் என்று அன்வார் உறுதியளித்திருக்கிறார்.
நீண்டகால நடைமுறை மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின் 153ஆவது பிரிவுடன் இணைந்திருக்கும் பூமிபுத்ராக்களுக்கான ஒதுக்கீட்டை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டி அவர் வலியுறுத்தினார்.