
கோலாலம்பூர், மே-9- SPM தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கான நேரடி மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்புக்கான நிபந்தனைகளை, அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அதனை வலியுறுத்தி, Concerned UM Indian Graduates அல்லது CUMIG எனும் இந்திய பட்டதாரிகள் அமைப்பு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கடிதம் எழுதியுள்ளது.
10 A-களுக்கும் மேல் பெற்ற மாணவர்களுக்கு இன வாரியாகப் பார்க்காமல் நேரடி மெட்ரிகுலேஷன் வாய்ப்புப் கிடைக்கும் என்று தான் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
அந்நிபந்தனைகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது; அதாவது குறைந்தது 10 பாடங்களில் A பெற்றிருக்க வேண்டும்; ஆனால் அந்த 10 A-க்களும் A+ அல்லது A என மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையிலேயே மிகச் சிறந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த நேரடி மெட்ரிகுலேஷன் வாய்ப்புக் கிடைப்பதை உறுதிச் செய்யவே, நிபந்தனைகள் ‘மேம்படுத்தப்பட்டுள்ளதாக’ கல்வி அமைச்சின் மெட்ரிகுலேஷன் பிரிவு விளக்கியுள்ளது.
ஆனால் A- அதில் விடுபட்டிருப்பதால் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்திருப்பது மட்டுமல்லாமல், உள்ளடியே கவலையடைந்துள்ளனர்.
எனவே, இப்புதிய நிபந்தனையை மறுபரிசீலனை செய்து, பழைய படி A+, A, A- மூன்றையுமே மிகச் சிறந்த தேர்ச்சியாக வகைப்படுத்த வேண்டுமென, CUMIG பிரதமரைக் கேட்டுக் கொண்டது.
தவிர, குறைந்தது 10 பாடங்களில் A தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் ஏற்புடையதாக இல்லை.
காரணம், 10 பாடங்களை எடுத்தே ஆக வேண்டுமென்பது கட்டாயமல்ல; 9 பாடங்களை எடுத்தாலே போதுமானது.
குறைந்தது 10 பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி என்றால், 9 பாடங்களை மட்டுமே எடுத்து அனைத்திலும் A நிலையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் விடுபட்டு விடுவர்.
எனவே, அந்நிபந்தனை “9 அல்லது அதற்கும் மேற்பட்ட பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி” என மாற்றப்பட வேண்டும்.
தங்களின் இவ்விரு கோரிக்கைகளையும் டத்தோ ஸ்ரீ அன்வார் பரிசீலித்து நல்ல முடிவெடுப்பார் என நம்புவதாக CUMIG கூறியுள்ளது.