
கோலாலம்பூர், செப்டம்பர்-6,
ஜோகூர் மாநில சுய முன்னேற்றச் சங்கமான PJDNJ, PPN விடுதி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் சுவாமி ஐயப்பன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய ‘STPM சாதனையாளர்கள் சந்திப்பு 2026’ நிகழ்ச்சி, நேற்று கோலாலாம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், ஷீரடி சாய்பாபா மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
STPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்விச் சாதனை, உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இக்கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன், நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சன்வே பல்கலைக் கழக பேராசிரியர் டத்தோ Dr அகமுத்து பெரியதம்பியும் சிறப்பு வருகைப் புரிந்த நிலையில், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் நிகழ்வை நிறைவுச் செய்து வைத்தார்.
இவ்வாண்டு மொத்தம் 42 சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த 46 நன்கொடையாளர்கள் மூலம் மொத்தம் RM42,450.00 நிதி திரட்டப்பட்டது.
மேலும், B40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி கற்றலுக்கு உறுதுணையாக 25 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்களை ஒன்று திரட்டி, கல்வியில் சாதனை படைக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்த விழா ஒரு முக்கிய தளமாக அமைந்ததா, வணக்கம் மலேசியாவிடம் பேசிய தியாகராஜ் சங்கரநாராயணன் கூறினார்.
APP PPN தலைவர் சுப்ரமணியம் கோவிந்தசாமி, தொடர்ந்து இந்நிகழ்வை நடத்தி வர முடிந்தது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்.
ஜோகூர் Jaya Diri சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி முனியாண்டி, ஏற்பாட்டாளர்களையும் மாணவர்களையும் பாராட்டினார்.
உதவிப் பெற்ற மாணவர்கள் சிலரும் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
கல்வியில் சாதனைகள் படைப்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதை உணர்த்திய இந்த விழா, மாணவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மேலும் பல சாதனைகளைப் படைக்க பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.



