கோலாலம்பூர், டிச 29 – பினாங்கு தைப்பூசத்திற்கு முதல் நாள் தங்க ரதம் ஊர்வலமாக செல்வதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் P. ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார். தைப்பூசத்தை நிர்வகிப்பதில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உறுதியாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பினாங்கில் தைப்பூசத்தை அதிகாரப்பூர்வமாக நிர்வகிப்பது பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தானே தவிர நகரத்தார்கள் அல்ல என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. தங்கத்தேர் மற்றொரு தேர் அல்ல, பினாங்கு தைப்பூசத்தின் அதிகாரப்பூர்வ தேர். தைப்பூசத் திருநாளில் தங்களுடைய வெள்ளித் தேரைத் தனித் தேராகப் பரிந்துரைக்கும் துணிச்சல் உள்ள நகரத்தாரை கண்டிக்க வேண்டும். தங்கத் தேர் ஊர்வலம் தொடர்பில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் மற்றும் இதர ஆணையர்கள் உறுதியாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.