Latestமலேசியா

இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு 4 அம்சக் கூறுகள் அடிப்படையில் தீர்வுகளை முன்னெடுக்கும் நூருல் இசா

பங்சார், மே-18- இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளைக்குத் தீர்வுக் காண தெளிவான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவை வெளிப்படையாக அறிவிக்கப்படவும் வேண்டும்.

அந்த இலக்குகளின் அடைவுநிலை குறிப்பிட்டக் காலத்திற்கு பின் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தும் அணுகுமுறையே தற்போதைக்கு அவசியமாகும்.

பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அதன் நடப்பு உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் அவ்வாறு கூறினார்.

அவ்வகையில் 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சொனார்.

முதலாவதாக, பெண்களுக்கான வாய்ப்புகள், அவர்களின் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கானத் தீர்வுகள், அடுத்ததாக இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புகள், தொழில் திறன் பயிற்சிகள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை நூருல் இசா பட்டியலிட்டார்.

மூன்றாவதாக, SMEs எனப்படும் சிறு நடுத்தர வணிகர்களுக்கான கடனுதவிகள் அல்லது தொழில் வாய்ப்புகள், நான்காவதாக அரசாங்க உயர் பதவிகளில் இந்தியர்களுக்கான வாய்ப்புகளாகும்.

ஆக, இந்த 4 முக்கியக் கூறுகளின் அடிப்படையில் KPI எனப்படும் முதன்மை அடைவுநிலைக் குறியீட்டை நிர்ணயித்து, இதன் மூலம் இந்தியர்களின் பிரச்னைகளைக் களைவதற்கான முயற்சிகளை தாம் முன்னெடுத்துள்ளதாக நூருல் இசா குறிப்பிட்டார்.

அதன் ஒருபகுதியாக துறைசார் வல்லுநர்களை உட்படுத்திய சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன; இனியும் நடத்தப்படும்.

அவற்றில் கிடைக்கப் பெறும் ஆலோசனைகளும், பரிந்துரைகளும் தீர்வுபட்டியலில் இடம் பெறும்.

துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் படாவிட்டாலும், இம்முயற்சியை ஒரு தனியாளாக தாம் முன்னெடுத்துச் செல்லவிருப்பதாக அவர் உறுதியளித்தார்.

இவ்வேளையில், அரசாங்கத்தின் மீது இந்தியச் சமூகம் கொண்டுள்ள சில அதிருப்திகளை தாம் அறிந்திருப்பதாக கூறிய நூருல் இசா, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார்.

பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்போது அதன் தாக்கத்தை பார்ப்பதற்கு சற்று கால அவகாசம் பிடிக்கும்; தவிர, அரசியல் ரீதியாக சில சவால்கள் இருப்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டுமென, கோலாலம்பூர் பங்சாரில் இன்று நடைபெற்ற இந்திய ஊடகத்தினருடன் நடந்த சந்திப்பில் நூருல் இசா தெரிவித்தார்.

இதில், கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!