
கோலாலம்பூர், அக்டோபர்-10,
1991 ஆம் ஆண்டின் இ.பி.எப் சட்டத்தின் கீழ் தேவைப்படும் ஊழியர்களுக்கு இ.பி.எப் தொகையை செலுத்தத் தவறும் முதலாளிகளுடன் அந்த நிறுவனம் எநதவொரு சமரசமும் செய்து கொள்ளாது. முதலாளிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதுடன் , உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் ஓய்வூதிய சேமிப்புகளைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியாக இருப்பதாக EPF வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1991 ஆம் ஆண்டு இ.பி.எப் சட்டத்தின் பிரிவு 43(2) மற்றும் பிரிவு 48(3) இன் படி ஊழியர்களுக்கு சந்தா செலுத்தாவிட்டால் அதற்கு முதலாளிகள் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் தவறு செய்யும் முதலாளிகளுக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் வழக்குத் தொடர்வதுடன் , நிறுவன இயக்குநர்களுக்கு எதிரான பயணத் தடைகள், அத்துடன் பறிமுதல், சொத்து விற்பனை மற்றும் திவால் நடவடிக்கைகள் உள்ளிட்ட அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இ.பி.எப் தெரிவித்துள்ளது.
e-Payroll தளம், Employer Interactive Portal (EIP), மனிதவளத் துறை மற்றும் Socso சமூகப் பாதுகாப்பு அமைப்பு போன்ற பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த ஆய்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை இ.பி.எப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே வேளையில் EPF உறுப்பினர்கள் தங்கள் கணக்கு விவர அறிக்கைகளை எப்போதும் i-Akaun விண்ணப்பம் மூலம் சரிபார்க்க வேண்டும் அல்லது ஓய்வூதிய ஆலோசனை அதிகாரியிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும் இ.பி.எப் வலியுறுத்தியுள்ளது.