
கோலாலம்பூர், ஜூன்-2-ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், 40-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பலமான ஆட்சியை அமைப்பதே தேசிய முன்னணியின் முதன்மை இலக்கு.
BN தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதனை அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஜோகூரில் உள்ள மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளை வெல்வதற்கான வியூகங்களை இப்போதே வகுத்து வருவதாக அவர் சொன்னார்.
மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசியின் சிறப்பான நிர்வாகம் மற்றும் மக்கள் செல்வாக்கு, இந்த இலக்கை மிக எளிதாக அடைய தங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என, துணைப் பிரதமருமான சாஹிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலில் தற்போதைய மடானி அரசாங்கத்தின் உணர்வோடு, அதே சமயம் தேசிய முன்னணியின் தனித்துவமான பலத்தையும் நிலைநிறுத்தும் வகையில் தங்களின் வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரச்சாரக் களம் அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பணிகளை ஜோகூர் BN கூட்டணி இப்போதே முடுக்கிவிட்டுள்ளது.
பெரும்பான்மைக்கு 29 இடங்கள் தேவையென்ற நிலையில், 2022 தேர்தலில் பாரிசான் 40 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.



