கோலாலம்பூர், டிசம்பர் 7 – நாடு முழுவதும், நெடுஞ்சாலைகளில், மழை அல்லது அவசர வேளைகளில், மோட்டார் சைக்கிளோட்டிகள் “ஒதுங்க” ஏதுவாக அமைக்கப்பட்டு வரும் 119 புகலிடங்களில், 40 பூர்த்தியாகியுள்ளதாக, பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளோட்டிகளின் நலனை பேணும் வகையில், பிதாரா (Bitara) மடானி திட்டத்தின் கீழ் அந்த புகலிடங்கள் அமைக்கப்படுகின்றன.
LLM – மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும் அத்திட்டம், நாடு முழுவதும் உள்ள 33 நெடுஞ்சாலைகளை உள்ளடக்கியுள்ளது.
உண்மையில் அந்த திட்டத்தின் கீழ் 472 புகலிடங்களை அமைக்க இலக்கிடப்பட்டது. அதில் 353 ஏற்கனவே பூர்த்தியடைந்து விட்டன.
இன்று வரை மேலும் 40 முழுமைப்பெற்றுள்ள வேளை ; எஞ்சியவை அடுத்தாண்டு கட்டிமுடிக்கப்படுமென நந்தா சொன்னார்.
இதனிடையே, எதிர்காலத்தில், நாட்டில் கட்டப்படும் நெடுஞ்சாலைகள், மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான சிறப்பு வழித்தடத்தை கட்டாயம் உள்ளடக்கி இருக்க வேண்டுமெனவும் நந்தா வலியுறுத்தினார். மோட்டார் சைக்கிளோட்டிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அது அவசியம் என்றாரவர்.