ஈப்போ, ஜன, 22 – ஈப்போ கல்லுமலை, ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூசத்தில் தைப்பூச தினத்தன்று 10,000 பக்தர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவில் அன்னதானம் வழங்கப்படும் என அன்வாரின் தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு அதிகாரியான ஆர். சுரேஷ்குமார் தெரிவித்தார். இன்று ஈப்போவில் பேரா மாநில இந்து சங்க கட்டிடத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றியபோது பேரா இந்து சங்க நடவடிக்கைக்காக 25,000 ரிங்கிட் மான்யத்தையும் அன்வார் வழங்கினார். இன்று ஈப்போவில் உள்ள பேரா மாநில இந்து சங்க கட்டடத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் கலந்துக்கொண்ட சுரேஷ்குமார் 25,000 ரிங்கிட்டிற்கான காசோலையை பேரா மாநில இந்து சங்கத்தின் தலைவர் பெ. சுந்தரசேகரனிடம் வழங்கினார்.
இதனிடையே இந்து சமய வளர்ச்சிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசன் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நாட்டில் பல்வேறு சவால்களை இந்து சங்கம் எதிர்நோக்கி வருகிறது. இதனை சமாளித்து பல காரியங்களை செய்து வருகிறது. பல இன சமயத்தவர்கள் வாழும் இந்த நாட்டில் சமுக ஒற்றுமை அவசியம். அதன் அடிப்படையில் டத்தோஸ்ரீ அன்வார் தமது சேவையை மேற்கொண்டு வருகிறார். அவரின் சேவையில் இந்து சங்கத் நம்பிக்கை கொண்டுள்ளது. அவரின் நடவடிக்கை சமுக ஒற்றுமை வலுப்படுத்தும் என்று தங்க கணேசன் தெரிவித்தார்.