
கோலாலம்பூர், ஜூன்-19 – உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN, ஆடம்பர முத்திரைகளைப் பயன்படுத்தி விற்கப்படும் 15,000 போலி காலணிகள் மற்றும் செருப்புகளை சீல் வைத்துள்ளது.
கோலாலம்பூர் Jalan TAR-ரில் உள்ள மொத்த விற்பனை வளாகமொன்றில் 8 சேமிப்புப் கிடங்குகள் மற்றும் 2 கண்காட்சி அறைகளில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் அப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு 400,000 ரிங்கிட் என கோலாலம்பூர் KPDN இயக்குநர் Mohd Sabri Seman கூறினார்.
நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுவதற்கு முன்பு, அங்கு அப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு வந்துள்ளன.
உண்மையான வர்த்த முத்திரையை வைத்துள்ள 12 நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து 2 வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் பலனாக அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சீனாவிலிருந்து நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் வாயிலாக அந்த போலி காலணிகளும் செருப்புகளும் கடத்திக் கொண்டு வரப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
சீனாவிலிருந்து தலா 3 முதல் 4 ரிங்கிட்டு ஒரு ஜோடி செருப்பை வாங்கி, இங்கு வியாபாரிகளிடம் விற்கப்படுகிறது; அவர்களோ அதனை 15 முதல் 20 ரிங்கிட்டுக்கு விற்கின்றனர்.
அதே சமயம் காலணிகளை 20 ரிங்கிட்டுக்கு வாங்கி உள்ளூர் வியாபாரிகளிடம் 50 ரிங்கிட்டுக்கு இக்கும்பல் விற்கிறது.
வியாபாரிகளோ அவற்றை 80 முதல் 100 ரிங்கிட் வரையில் விற்கின்றனர்.
இந்நிலையில், அக்கும்பலின் நிர்வாகி என நம்பப்படும் 20 வயது மதிக்கத்தக்க உள்ளுர் ஆடவர் விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்