கோலாலம்பூர், டிச 3 – மலேசிய நால்வர் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் மறையான திருமுறை மாநாடு எதிர்வரும் டிசம்பர் திங்கள் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 முதல் மாலை மணி 5.30 வரை கோலாலம்பூர், பிரிக்பீல்ட் , கலா மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. திருமுறை காட்டும் பெருநெறி என்ற தலைப்பில் இந்த ஒரு நாள் மாநாடு நடைபெறவிருக்கிறது. தவத்திரு பாலயோகி சுவாமிகள் ஆசியோடு தொடங்கும் இம்மாநாட்டை ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றுவார்.
கடந்த 10 ஆண்டு காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் மலேசிய நால்வர் மன்றம் இவ்வாண்டு மன்றத்தின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக இந்த திருமுறை மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த மன்றத்தின் தலைவரும் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவருமான பாலகிருஷ்ணன் கந்தசாமி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
நால்வர் மன்றத்தின் 10 ஆம்ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்சியில் திருமுறை கச்சேரி, திருமுறையில் பரதநாட்டியம், மன்றத்தின் பல்லூடக படைப்பு , 63 நாயன்மார்கள் நூல் வெளியீடும் நடைபெறவிருப்பதாக பாலகிருஷ்ணன் கந்தசாமி தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அன்பளிப்பாக மாநாட்டு மலர், சிவபுராண புத்தகம், உருத்திராக்கம் ஆகியவையும் வழங்கப்படும். எனவே இந்த மாநாட்டில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர். இது தொடர்பான மேல் விவரவங்களுக்கு 012- 2347495 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.