உலு சிலாங்கூர், மார்ச் 11 – உலு சிலாங்கூரில் மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு வெளிநாட்டவர்கள் டாங்கி லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர்.
புக்கிட் பெருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசாவுக்கு இடையில், புக்கிட் பெருந்தோங் டோல் சாவடிக்கு அருகேயுள்ள முக்கியச் சாலையில் நேற்றிரவு அவ்விபத்து நிகழ்ந்தது.
டாங்கி லாரி, பழுதாகி சாலையோரமாக கிடந்த Hyundai Accent கார், Demak EX 90 மோட்டார் சைக்கிள் ஆகியவையே விபத்தில் சம்பந்தப்பட்ட மூன்று வாகனங்களாகும்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்களும், விபத்து ஏற்பட்ட வேகத்தில் லாரி அடியில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மீட்புக் குழுவைச் சேர்ந்த 7 பேர், 40 வயது மதிக்கத்தக்க அவ்விருவரையும் லாரிக்கு அடியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
எனினும், அவர்கள் உயிரிழந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிபடுத்தியதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் சொன்னார்.
மரணமடைந்தவர்களின் சடலங்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.