ஷா ஆலாம், பிப்ரவரி 15 – சிலாங்கூர், பாங்கியை தளமாக கொண்டு செயல்படும், அமான் பாலஸ்தீன தொண்டூழிய அமைப்பின் இயக்குனர் குழுமத்தை ஏமாற்றிய இருவருக்கு எதிராக, இன்று, சிலாங்கூர்,ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில், 52 நம்பிக்கை மோசடி, 19 ஏமாற்று நடவடிக்கைகள், 19 சட்டவிரோத பணமாற்று நடவடிக்கைகள் உட்பட மொத்தம் 161 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2021 செப்டம்பர் முதல் கடந்தாண்டு ஜூலை வரை, சுமார் மூன்று கோடியே 95 லட்சத்து 30 ஆயிரத்து 300 ரிங்கிட் 96 சென்னை உட்படுத்திய பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதும் அதில் அடங்கும்.
அந்த பணத்தை கொண்டு அவர்கள் சில வீடுகளையும், வர்த்தக கட்டடங்களையும் வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களில், அமான் பாலஸ்தீன அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அவாங் சுபியான் அவாங் பியூட் மற்றும் நிர்வாக இயக்குனர் அப்துல்லா ஜாய்க் அப்த் ரஹ்மா ஆகியோர் அடங்குவர்.
குற்றம் நிரூப்பிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
முன்னதாக, மூன்று கோடியே பத்து லட்சம் ரிங்கிட் பெருமானமுள்ள தங்கக் கட்டிகளை வாங்கியதன் வாயிலாக அவர்கள், 57 லட்சத்து 50 ஆயிரத்து 30 ரிங்கிட் இலாபத்தை ஈட்டியதாகவும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படிகளும், அபராதமும் விதிக்கப்படலாம்.
எனினும், அவ்விருவரும் தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து இன்று விசாரணை கோரிய வேளை ; இவ்வழக்கு விசாரணை மார்ச் 13-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
அதோடு, அவ்விருவரையும் தலா பத்து லட்சம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.