கோலாலம்பூர், நவ 22- அனைத்துலக தலைமைத்துவ தகுதியைக் கொண்ட தலைவர்கள் மலேசியாவில் குறைவாக உள்ளதோடு கணிசமான பொருளாதாரப் பலன்களைத் தராத வெளிநாட்டுத் தொடர்பு முயற்சிகளில் அதிக நேரத்தை செலவிடுவதாக பேங்க் நெகாரா மலேசியாவின் முன்னாள் துணை கவர்னர், சுக்தேவ் சிங் சாடியுள்ளார். அரசாங்கம் உண்மையான அனைத்துலக அரசியல் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், சமச்சீரான முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதற்கு பதிலாக , உலகளாவிய முன்னேற்றங்களுக்கு எதிரிவினையாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
குறிப்பிட்ட தலைவர்களை நேரடியாக பெயரிடாமல், முக்கியமான பொருளாதார பங்காளிகளை அந்நியப்படுத்தும் அபாயத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு சிறிய நாடான மலேசியா, அதன் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமான நாடுகளை பகைப்பதைத் தவிர்க்க வேண்டும் என சுக்தேவ் சிங் வலியுறுத்தினார். அனைத்துலக அரசியல்வாதிகளாக இல்லாத பல தலைவர்களை மலேசியா கொண்டுள்ளது. அனைத்துலக முன்னேற்றங்கள் குறித்த சீரான கண்ணோட்டத்தை வழங்குவதில் அவர்கள் தோல்வியடைந்துள்ளனர். மேலும் அவர்கள் நிலைமையை புரிந்துகொண்டு இணக்கப்பூர்வமாக செயல்படுவதற்கு பதிலாக உணர்சிப்பூர்வமாக செயல்பட்டு சிக்கலை ஏற்படுத்தி விடுவதையும் சுக்தேவ் சிங் சுட்டிக்காட்டினார்.