பஞ்சாப், மார்ச் 31 – இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், 10 வயது சிறுமியின் பிறந்தநாளுக்கு Online-னில் ஆர்டர் செய்யப்பட்ட கேக், கடைசியில் அவளுக்கே எமனாகியத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
மார்ச்-24ஆம் தேதி இரவு 7 மணி வாக்கில் குடும்பத்தார் முன்னிலையில் Manvi பிறந்தநாள் கேக் வெட்டினாள்.
ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
இரவு 10 மணிக்கெல்லாம் Manvi-யின் தங்கை வாந்தி எடுக்க, Manvi-க்கும் திடீரென அதிகமாகத் தாகம் எடுத்திருக்கிறது.
குடிக்கத் தண்ணீர் கேட்டவள் பின்னர் தூங்கச் சென்று விட்டாள்; வீட்டில் உள்ளவர்களுக்கும் கேக் சாப்பிட்டதில் வயிற்று உபாதைகள் வந்திருக்கின்றன.
மறுநாள் காலையில் Manvi-யின் உடல்நலம் மோசமாகி, குடும்பத்தார் அவளை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.
மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் Manvi-யின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என அவளின் தாத்தா சோகத்துடன் கூறினார்.
தாங்கள் ஆர்டர் செய்த அந்த சாக்லெட் கேக்கில் நச்சுப்பொருள் கலந்திருக்கலாம் என சந்தேகித்த குடும்பம், கேக் கடைக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளது.
சவப்பரிசோதனை நிறைவடைந்துள்ள நிலையில், Manvi-யின் உயிருக்கு எமனாய் முடிந்த கேக்கின் மாதிரியும் சோதனைக்காக ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆசை ஆசையாய் Manvi பிறந்தநாள் கேக் வெட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் முன்னதாக பகிரப்பட்ட நிலையில், நச்சுணவால் அவள் உயிரிழந்த சோகம் நெட்டிசங்களையும் ஆட்கொண்டிருக்கின்றது.