Latestமலேசியா

நான் வசதியான அரசியல்வாதியல்ல; சமூகத்திற்காக குரல் கொடுத்தேன்; RM1.52 மில்லியன் செலுத்த பொதுமக்கள் உதவ வேண்டும் – பேராசிரியர் ராமசாமி

கோலாலம்பூர், நவ 2 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயக்கிற்கு எதிரான அவதூறு வழக்கில் அவருக்கு 1.52 மில்லியன் ரிங்கிட் வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது பொதுமக்களிடமிருந்து நன்கொடை உதவியை பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் ராமசாமி நாடியுள்ளார்.

நான் முன்னாள் அரசியல்வாதி, இதர அரசியல்வாதியைப்போல் பணக்காரர் அல்ல. ஆனால் சமூதாயத்திற்காக குரல் கொடுத்தேன். எனக்கும் ஸாகிர் நாயக்கிற்கும் தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. மலேசிய மக்கள் முக்கியமாக இந்தியர்களின் விசுவாசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் அதற்கு பதில் கொடுப்பதற்காக அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்காக அவர் என் மீது அவதூறு வழக்குப் போட்டு அதில் வெற்றி பெற்றுள்ளார் என ராமசாமி கூறியிருக்கின்றார்.

பொதுமக்களின் நிதியதவி மூலம் போதுமான நிதியை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தேவைக்கு அதிகமாக நிதி கிடைத்தால் அதனை ஏழை மாணவர்களுக்காக கொடுப்பேன். தமிழர் குரல் ஏற்பாட்டில் இந்த நிதி திரட்டப்படுகிறது. நிதி குறித்த அனைத்து தகவல்களும் வெளிப்படையாக இருக்கும். கணக்கு விவரங்கள் அனைத்தும் முறையாக வழங்கப்படும் என டாக்டர் ராமசாமி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

இதனிடையே தமக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் ராமசாமி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!