நாக்பூர், ஜன 12 – அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 7000 கிலோ கிரம் எடையில் ‘ராம் அல்வா’ தயாரிக்கும் பணியில் இந்தியா, நாக்பூரைச் சேர்ந்த, பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் ஈடுபடவுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ கிரம் அளவுக்கு ரவையில் அல்வா தயாரிக்கவுள்ளார்.
இதில் 900 கிலோ கிரம் ரவை, 1000 கிலோ கிரம் சர்க்கரை, 1000 கிலோ கிரம் நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ கிரம் ஏலக்காய், 300 கிலோ கிரம் பாதாம் மற்றும் திராட்சை ஆகியவை பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந்த அல்வாவை செய்வதற்காக 12,000 லிட்டர் கொள்ளளவில், 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ கிரம் எடையுள்ள சிறப்பு கடாய் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. எக்கு மற்றும் இரும்பால் கொண்டு செய்யப்பட்ட இந்த கடாயை தூக்குவதற்கு கிரேன் பயன்படுத்தப்படுமாம்.
இங்கு தயாரிக்கப்படும் அல்வா குழந்தை ராமருக்குப் படைக்கப்பட்ட பின்னர் ஒன்றரை லட்சம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.
இதனை தயாரிக்கும் சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் பல முறை கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். இந்த ராம் அல்வா தயாரிப்பின் மூலமும், மீண்டும் அவரின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என விஷ்ணு மனோகர் நம்புகிறார்.