ஷா ஆலாம், டிசம்பர் 4 – சிலாங்கூர், ஷா ஆலாமில், நேற்று போலீஸ் அதிகாரியை மோதித் தள்ளிய பொருள் விநியோகிப்பாளர், மோட்டார் சைக்கிளில் பக்கவாட்டு கண்ணாடி இல்லை என்பதால், அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சத்தில், தப்பிச் செல்ல முற்பட்ட போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
சாலை குண்டர்களை அடையாளம் காணும் சோதனை நடவடிக்கையின் போது, அச்சம் காரணமாக அந்த பொருள் விநியோகிப்பாளர், போலீஸ் அதிகாரியை மோதித் தள்ளியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, ஷா ஆலாம் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவர் செலுத்திய மோட்டார் சைக்கிளை சோதனையிட்டதில், அதில் பக்கவாட்டு கண்ணாடி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட பதற்றம் காரணமாக தப்பியோட முயன்ற அவர் போலீஸ் அதிகாரியுடன் விபத்தில் சிக்கியுள்ளார்.
அவ்வாடவர் முறையான வாகனம் ஓட்டும் அனுமதியையும், சலை வரியையும் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதே சமயம், அவருக்கு எதிராக பழைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை.
இவ்வேளையில், அவ்வாடவருடன், அச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த போலீஸ் அதிகாரி, ஷா ஆலாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேகமாக மோதப்பட்டு விழுந்ததில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் பின் தலையில் இரத்தக் கட்டு ஏற்பட்டிருக்கும் வேளை ; கண்ணில் ஏற்பட்ட இரத்த காயம் காரணமாக, மோட்டார் சைக்கிளோட்டிக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு மணி 12.30 வாக்கில், ஷா ஆலாம், செக்ஷன் 14-யில், சாலை தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை, தப்பி ஓட முயன்ற மோட்டார் சைக்கிளோட்டி மோதித் தள்ளியது குறிப்பிடத்தக்கது.