கோலாலம்பூர், பிப்ரவரி 15 – தாம் வாங்கிய சாண்ட்விச்சில், தக்காளி, சீஸ், முட்டை என உள்ளடக்கம் எதுவும் இன்றி இருந்ததை கண்ட நபர், தனது ஏமாற்றத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
கடை ஒன்றில், “ஹோம்மேட்” அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட அந்த சாண்ட்விச்சை அவர் வாங்கியுள்ளார்.
அந்த சாண்ட்விச்சின் வெளிப்புறம் அல்லது பக்கவாட்டில் வெளியில் தெரியும் வகையில் உள்ளடக்கம் இருப்பதை போல வைக்கப்பட்டிருந்தது. எனினும் உள்ளே திறந்து பார்த்தால், அதில் ரொட்டி துண்டுகளை தவிர வேறு ஒன்றும் இல்லை என அந்நபர் தனது பதிவின் வாயிலாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், அந்த சாண்ட்விச் எங்கு வாங்கப்பட்டது என்ற விவரம் எதுவும் அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை.
“இது ஒரு பொய் சாண்ட்விச். வெளியிலிருந்து பார்க்கும் போது இருந்தது, ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை” எனவும் அவர் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்நபரின் பதிவிற்கு கீழ், இணைய பயனர்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த அதே போன்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
“நீங்கள் செய்வதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என அதில் ஒருவர் சாடியுள்ள வேளை ; “நோயாளிகள் இருக்கும் மருத்துவமனைகளில் கூட இதுபோன்ற சம்பவங்கள் வழக்கமாகிவிட்டன” என மற்றொருவர் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார்.