கோலாலம்பூர். டிச 13 – அடுத்த பேரரசராக பதவியேற்கவிருக்கும் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், எம்.ஏ.சி.சி மற்றும் பெட்ரோனாஸ் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒரு பரிந்துரை மட்டுமே என்றும், அரசாங்கத்துடன் இது குறித்து சுமூகமாக விவாதிக்கலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் தெரிவித்திருக்கிறார்.
அரசாங்க நிர்வாகத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் ‘அதிகாரங்களை பிரித்தல்’ எனப்படும் அதிகாரப் பகிர்வு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“சுல்தான் இப்ராஹிமின் பரிந்துரை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை பாதிக்காது. நாங்கள் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தலாம் . இருப்பினும், நாடாளுமன்ற ஜனநாயககமும் பேரரசரின் நிலையை வரையறுக்கும் அரசியலமைப்பின் நிலையும் தொடர்ந்து நீடிக்கும் ” என்று அன்வார் குறிப்பிட்டார்.
பேரரசருடன் கருத்து வேறுபாடு ஏற்படுமாயின் அதை சுமூகமான முறையில் கலந்துப் பேசி தீர்வை நாடலாம் என்றார் பிரதமர்.
நாட்டின் பேரரசராக அரியணையில் அமர்ந்ததும் , எம்.ஏ.சி.சி மற்றும் பெட்ரோனாஸும் தமக்கு நேரடியாக பதில்கூறக்கூடிய பொறுப்பையும் கடப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சுல்தானின் அந்த பரிந்துரையை சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று துன் மகாதீர் கருத்துரைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.