
கோலாலம்பூர், மே-30 – B40 மற்றும் M40 குடும்பங்களுக்காக தொடங்கப்பட்டதே PPSMI எனப்படும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாகும்.
பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, இந்த PPSMI நிதியை வழங்குகிறது.
கடந்த டிசம்பரில் விண்ணப்பங்கள் திறக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 1,332 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன; அவற்றின் மதிப்பு 564 மில்லியன் ரிங்கிட்டாகும் என மித்ரா தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
ஆழமான பரிசீலனைக்குப் பிறகு தொடக்கக் கட்டமாக 45 அமைப்புகளின் விண்ணப்பங்கள் MITRA பணிக்குழு நிலையில் அங்கீகரிக்கப்பட்டு பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுகாக அனுப்பட்டுள்ளன.
அதே சமயம் 1,073 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டதாக, செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
முழுமையற்ற விண்ணப்பங்கள், நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யாத விண்ணப்பங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் ஒருவரே அனுப்பிய விண்ணப்பங்கள், சங்க உறுப்பினர்கள் முறித்த முறையற்ற தகவல்கள் மற்றும் பதிவுச் சான்றிதழ்களைக் கொண்ட விண்ணப்பங்கள் உள்ளிட்டவை நிராகரிக்கப்பட்டன.
இன்னமும் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் மீதான் முடிவுகளை வரும் ஜூன் 30-க்குள் அறிவித்து விடவும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் சொன்னார்.
அனைத்து நிதியுதவியும் இந்தியச் சமூக நலனுக்காக நியாயமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் விநியோகிக்கப்படுவது உறுதிச் செய்யப்படுமென்ற மித்ராவின் கடப்பாட்டை பிரபாகரன் மறுஉறுதிப்படுத்தினார்.