
புத்ராஜெயா, ஜூன்-11 – தேசிய உயர் கல்வி நிதிக்கழகமான PTPTN-னிடம் கடன் பெற்றவர்களில் 400,000 பேர் இதுவரை 1 சென் கூட திருப்பிச் செலுத்தவில்லை.
உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்ர
மேற்கல்வியை முடித்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும், அவர்கள் அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்; இதனால் நிலுவையில் உள்ள கடன் பாக்கி 5 பில்லியன் ரிங்கிட்டை எட்டியிருப்பதாக அவர் சொன்னார்.
புத்ராஜெயாவில் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் அதனைத் தெரிவித்தார்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பிரச்னையை எதிர்நோக்குவோருக்கு, தளர்வான திருப்பிச் செலுத்தும் முறை, மாத தவணைப் பண மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்து PTPTN-னுடன் கலந்துபேச வேண்டும்.
“கடன் பாக்கியை 100 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு என ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை; அவர்களால் இயன்ற அளவுக்கு தவணைப் பணமாக முறையாக கட்டி வந்தால் கூட போதுமானது; அதிகாரிகள் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள்” என Dr சாம்ரி கூறினார்.