Latest

சென்னையில் 6-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு; மலேசியாவைப் பிரதிநிதித்து தான் ஸ்ரீ நடராஜா தலைமையேற்பு

சென்னை, மே-4- தமிழகத்தின் சென்னையில் 6-ஆவது முறையாக அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

14 நாடுகளிலிருந்து 1,000 பேராளர்கள் பங்கேற்கும் 3-நாள் இம்மாநாட்டினை நேற்று SRM பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் R.N.ரவி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

மலேசியப் பேராளர் குழுவுக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையேற்றிருந்தார். அவரோடு ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணனும் மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமாரும் கலந்துகொண்டனர்.

SRM பல்கலைக்கழகத்தின் தோற்றுனரும் வேந்தருமான பாரிவேந்தர் முன்னிலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் சிறப்பம்சமாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட மாநாட்டு நினைவு மலரின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளும் கௌரவம், தான் ஸ்ரீ நடராஜாவுக்குக் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டு ஆளுநர் ரவியிடமிருந்து ஸ்ரீ நடராஜா அதனைப் பெற்றுக் கொண்டார்.

இவ்வேளையில், மயிலாடுதுறை பா. ஐயாசாமி எழுதிய ‘அபிராமி அந்தாதி’ நூலும் அந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.

முதல் நூலை, டத்தோ என். சிவகுமார் பெற்றுக் கொண்டார்.

அவர் தமதுரையில், இளம் வயதிலேயே சைவ சித்தாந்த விழிப்புணர்வு தொடங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான சிவகுமார், இவ்வளவுப் பெரிய மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த குழுவினருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, 300 ஆய்வுக் கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!