
கிள்ளான், ஆகஸ்ட்-1-கிள்ளான், தாமான் தெலுக் கெடுங் இண்டாவில் ஊராட்சி மன்றமும் பொது மக்களும் இணைந்து மேற்கொண்ட தெருநாய்கள் பிடிக்கும் நடவடிக்கையின் போது, வளர்ப்பு நாய் Rocky உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இச்சம்பவம் பெரும் வைரலாகி, #justiceforrocky என்ற hashtag-கை உருவாக்கி, இணையவாசிகள் trending செய்து வரும் வேளை, விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
விலங்குக்குத் தீங்கு விளைவித்து கொன்ற குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் 428-ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை, தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ் கூறியது.
சமூக வலைத் தளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு குழுவினர் நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுப்பதும், அதனை விடுவிக்குமாறு ஒரு பெண் கதறி அழுவதும் பதிவாகியுள்ளது.
அந்த நாய், தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கிள்ளான் அரச மாநகர மன்றமான MBDK சார்பிலும் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த Rocky நாயின் உடல், சவப் பரிசோதனைக்காக சிலாங்கூர் கால்நடை மருத்துவத் துறை தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெறுவதால், பொது மக்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களையோ அல்லது அந்த வீடியோவையோ சமூக வலைத்தளங்களில் மேலும் பரப்ப வேண்டாம் என்றும் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.



