புத்ரா ஜெயா, மார்ச் 16 – இவ்வாண்டு இதுவரை 23 வெப்பவாத சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு அமைச்சின் இந்த புள்ளி விவரம் உள்ளது. இதுவரை கெடா, பெர்லீஸ் , சிலாங்கூர், சபா மற்றும் பஹாங்கில் வெப்ப வாதம் குறித்த பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக செய்தியாளர் கூட்டத்தில் ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.
கடுமையான பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற தகவலையும் அவர் வெளியிட்டார். எனினும் அந்த நோயாளி தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேறியதோடு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாக அவர் தெரிவித்தார்.
கடுமையான வெயிலின்போது வெளியில் செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடையை பயன்படுத்தும்படி டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் கேட்டுக் கொண்டார்.