
சிரம்பான் – மே 23- சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் கல்விக்கூட மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்வில் 2,000 பேர் கலந்து கொண்டதோடு 1 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டது.
நேற்று சிரம்பான் Regent மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் , ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் ( Cha kee chin ) ஆகியோரும் சிறப்பு வருகையாளர்களாக கலந்துகொண்டனர்.
இப்பள்ளியில் புதிய மண்டபம் மற்றும் சிற்றுண்டி நிலையம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்வில் அந்தோனி லோக் 50,000 ரிங்கிட்டிற்கான காசோலையை வழங்கினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு தேவைப்படும் நிதியுதவியை தாம் தொடர்ந்து வழங்கிவருவதாகவும் அந்தோனி லோக் தெரிவித்தார். இதனிடையே, இந்த விருந்து நிகழ்வில் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் Cha Kee Chin 82,100 ரிங்கிட் நிதிக்கான காசோலையையும் வழங்கினார். மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நடனம், நாடகம் உட்பட பல்வேறு படைப்புகளும் இடம்பெற்றன.
மேலும் இப்பள்ளியின் வரலாற்றை சித்தரிக்கும் காணொளியும் மற்றும் புதிதாக எழுப்பப்படுவிருக்கும் மண்டபம் , சிற்றுண்டி நிலையம் தொடர்பான காணொளியும் விருந்தினர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.
இந்த விருந்து நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் பணம் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் புதிய மண்டபம் மற்றும் சிற்றுண்டி நிலையம் நிர்மணிப்பதற்கு பயன்படுத்தப்படும் என நெகிரி மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அருள் குமார் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார் .
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் Mohd Razi Balan Bin Abdullah மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் அவர்களது வசதிக்காகவும் நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினரும் திரளாக கலந்துகொண்டது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
மாணவர்கள் பயன்படும் வகையில் தூரநோக்கு சிந்தனையோடு புதிய மண்டபம் மற்றும் சிற்றுண்டி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை முழுமையாக வெற்றி பெறுவதற்கு லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் மட்டுமின்றி சமூக நலன் கருதி நிதியுதவி வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் பள்ளி தலைமையாசிரியர்
நன்றியை தெரிவித்துக் கொண்டார். நாம் ஒன்றுமையுடன் செயல்பட்டால் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்ற முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு சரியான முன்னுதாரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.