குவந்தான், டிச 27 – பெக்கான், கம்போங் சுங்கை மியாங்கிற்கு அருகே பெரோடுவா கஞ்சில் ஒன்று டிரெலர் லோரியுடன் மோதிய கோர விபத்தில் இருவர் மரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் கருகி மாண்டதாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். நேற்றிரவு மணி 8.22 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் டிரெலர் லோரியில் மோதிய கஞ்சில் கார் இரண்டாக பிளவுபட்டதாக கூறப்பட்டது. அந்த காரின் ஓட்டுனர் என நம்பப்படும் ஆடவர் அக்காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். அக்கார் தீப்பிடித்ததைத் தொடர்ந்து அதன் முன்புற பயணியின் இருக்கையில் சிக்கிக்கொண்ட பெண் தீயில் கருகி மாண்டார். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அந்த இருவரும் மரணம் அடைந்ததை தீயணைப்பு பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.