ஜோகூர் பாரு, ஜனவரி 18 – ஜோகூர், பெர்மாஸ் ஜெயாவிலுள்ள, உணவகம் ஒன்றுக்கு முன்புறம், ஆடவர் கும்பல் ஒன்று கைகலப்பில் ஈடுபட்டதற்கு கருத்து வேறுபாடே காரணம் என நம்பப்படுகிறது.
அந்த கைகலப்பில் ஈடுபட்ட ஐந்து உள்நாட்டு ஆடவர்கள் இதுவரை கைதுச் செய்யப்பட்டுள்ளதாக, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ராவுப் செலாமாட் தெரிவித்தார்
நேற்றும், நேற்று முன்தினமும், ஜோகூர் பாரு சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள, நான்கு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளபட்ட சோதனை நடவடிக்கைகளில், அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அச்சம்பவம் தொடர்பில், கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மணி 2.27 வாக்கில் போலீஸ் புகார் செய்யப்பட்டதையும், ரவுப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.
அதன் அடிப்படையில், 17 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்ட வேளை; அவர்களிடமிருந்து இரு பிரம்புகளும், இரு கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதுச் செய்யப்பட்டவர்கள், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பண்டார் பாரு பெர்மாஸ் ஜெயாவிலுள்ள, உணவகம் ஒன்றுக்கு முன்புறம், ஆடவர் கும்பல் ஒன்று பிரம்புகளுடன் கைகலப்பில் ஈடுபடும் 39 வினாடி காணொளி வைரலானது குறிப்பிடத்தக்கது.