ஈப்போ, பிப் 2 – தெலுக் இந்தான் பள்ளியில் முதல் வகுப்பு மாணவி ஒருவரை மானப்பங்கம் செய்த மற்றொரு சக ஊழியரைப் பள்ளி பாதுகாவலர் கையும் களவுமாக பிடித்துள்ளார். தாம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது அந்த சந்தேகப் பேர்வழி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை அந்த பாதுகாவலர் கண்டுள்ளார் என ஹிலிர் பேராக் போலீஸ் தலைவர் அஹ்மாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார். நேற்று விடியற்காலை 6.30 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழி இந்த மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டதை அந்த பாதுகாவலர் கண்டுபிடித்துள்ளார்.
வகுப்பறை ஒன்றில் அந்த 7 வயது சிறுமியை அந்நபர் மானப்பங்கப்படுத்தியதை கண்டு தடுத்ததோடு அந்த நபருக்கு எதிராக பள்ளி பாதுகாவலர் போலீசில் புகார் செய்ததாக வெளியிட்ட அறிக்கையில் அஹ்மாட் அட்னான் தெரிவித்திருக்கிறார். அந்த சந்தேக நபர் பலமுறை தம்மிடம் இப்படி நடந்துகொண்டதை அச்சிறுமி தெரிவித்துள்ளதோடு கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரும் ஒப்புக்கொண்டதாகவும் அஹ்மாட் அட்னான் தெரிவித்தார். 45 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி பிப்ரவரி 6ஆம் தேதி வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.