ரவூப், மார்ச் 15 – மலேசியா முழுவதும் அரசுப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இந்த வாரம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த புதிய கல்வி ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் பலர் களம் இறங்கினார்.
அதன் அடிப்படையில், பஹாங்கில் அமைந்துள்ள சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர் பதிவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் இல.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தேசியப் பள்ளியிலிருந்தும் சீன பள்ளியிலிருந்தும் மாற்றலாகிய மாணவர்கள், காராக் தமிழ்ப்பள்ளியிலிருந்தும் மாற்றலாகியவர்கள், தான் படித்த பள்ளியிலேயே பிள்ளைகளை பதிவு செய்தவர்கள் என மொத்தம் 9 மாணவர்கள் இந்த பள்ளியில் கூடுதலாகச் சேர்ந்திருக்கின்றனர்.
மிகச் சிறந்த தணிக்கைக்குமான விருதுகளை பல முறை வென்றுள்ள இந்த பள்ளியில், கணிசமான மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் அபாயக் கட்டத்தைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் வெளியிட்ட அறிக்கையின்படி தமிழ்ப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும், அங்கங்கே பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது வெள்ளிடை மலையாகும்.
இந்த அதிகரிப்பு அடுத்த அடுத்த ஆண்டுகளில் உயர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.