ஜோர்ஜ் டவுன் , ஜன 16 – தம்மை துன் டாக்டர் மகாதீர் இனவெறியர் என்று கூறியதற்கு பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சரான பேராசியரியர் டாக்டர் ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார். இன்னொருவரை இனவாதி என அழைக்க ஒரு பெரிய, தீவிரமான இனவெறியர் தேவை என்று மகாதீருக்கு ராமசாமி பதில் அளித்தார். ஜனவரி 11ஆம் அன்று ஒளிபரப்பப்பட்ட இந்திய தொலைக்காட்சியான தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் இரு முறை பிரதமராக இருந்துள்ள டாக்டர் மகாதீர், இந்தியர்கள் மற்றும் சீனர்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பினார். அவர்கள் மலேசியாவிற்கு முழுமையாக விசுவாசமாக இல்லை என்று கூறியிருந்ததை ராமசாமி கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் ராமசாமிதான் இனவாதி என மகாதீர் கூறியிருந்தார். இந்தியர் அடிப்படையிலான கட்சியை அமைப்பதற்கு DAP-யிலிருந்து வெளியேறிய ராமசாமியையும் மகாதீர் குறைகூறியிருந்தார்.
DAP ஒரு போலி பல்லினக் கட்சி என்பதால் அதை விட்டு வெளியேறியதாக மகாதீருக்கு ராமசாமி பதில் அளித்தார். இந்தியர்களின் அடிப்படையிலான கட்சியாக இருந்தாலும் தமது தலைமையிலான உரிமை கட்சி அனைவருக்கும் திறந்திருக்கும் என ராமசாமி கூறியுள்ளார். . உரிமை என்பது மலேசியர்களின் உரிமைகள் பற்றியது. இது மறுக்கப்பட்டு மற்றும் மறக்கப்பட்ட இந்திய உழைக்கும் சமூகத்தைப் பற்றியது. பணக்காரர்களுக்காக மட்டும் போராடும் டாக்டர் மகாதீரைப் போல் தாம் இல்லை. பணக்காரர்களைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. எனது போராட்டம் ஏழைகளுக்கானது என்றும் டாக்டர் மகாதீருக்கு ராமசாமி பதில் அளித்துள்ளார்.