
புத்ராஜெயா, மே-17 – தெரு நாய்களை சுட்டுக் கொல்வதை நிறுத்தக் கோரி, நூறுக்கும் மேற்பட்ட விலங்கின ஆர்வலர்கள் நேற்று புத்ராஜெயாவில் அமைதி மறியல் நடத்தினர்.
GHRF எனப்படும் அனைத்துலக மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் எஸ். ஷஷி குமார் தலைமையில், 2 இடங்களில் அம்மறியல் நடத்தப்பட்டது.
காலையில் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சுக்கு வெளியேயும் பிற்பகலில் KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சுக்கு வெளியேயும் அவர்கள் ஒன்றுகூடினர்.
தெருக்களில் சுற்றித் திரியும் பிராணிகளை முறையாகக் கையாளாதது, அப்படியே அவற்றை யாராவது தத்தெடுக்க விரும்பினால் 300 முதல் 2,000 ரிங்கிட் வரை ஊராட்சி மன்றங்கள் அதிக கட்டணம் விதிப்பது குறித்து, KPKT அமைச்சிடம் வழங்கப்பட்ட மகஜரில் சுட்டிக் காட்டப்பட்டது.
கைவிடப்பட்ட பிராணிகளை எடுத்து வளர்க்க மனதார விரும்புவோருக்கு உயரியக் கட்டணம் விதிப்பது நியாயமல்ல என ஷஷி குமார் குறிப்பிட்டார்.
பிராணிகளின் உயிர்கள் கருணையின் அடிப்படையில் பாதுகாக்கப்படுவதில்லை; மாறாக வியாபாரப் பொருளாகி விட்டதோ என்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது.
எனவே இது போன்ற கொள்கைகளை மறுஆய்வு செய்யுமாறு KPKTஅமைச்சு வலியுறுத்தப்பட்டது.
இவ்வேளையில், விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சுக்கான மகஜரில், கால்நடை சேவைத் துறையின் ‘இயலாமை’ சுட்டிக் காட்டப்பட்டது.
குறிப்பாக தெருக்களில் சுற்றித் திரியும் பிராணிகளின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் கட்டுப்படுத்த ஊராட்சி மன்றங்கள் தவறி வருவதை, கால்நடை சேவைத் துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது என ஷஷி சொன்னார்.
தெரு பிராணிகள் கொல்லப்படுவதைத் தடுக்கும் அதே வேளை, 2015 விலங்குகள் நலச் சட்டத்தில் திருத்தம் செய்வது, அவ்விஷயத்தில் ஊராட்சி மன்றங்களுக்கு விரிவாகப் பயிற்சியளிப்பது போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.